21 Dec 2010

Amazing Nature























வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்
கானில் வளரும் மரமலொம் நான். 
காற்றும் புனலும் கடலுமே நான்,
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான். 
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவமெலாம் நான்,
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்
இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,
புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.
மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளேன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.
அண்டங்கள் யாவையும் ஆக்கினேன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டபல சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான்.
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்,
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்.-

                                                    -பாரதி


No comments: